தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த மருத்துவா் சுபாஷ் சந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தாா். அதில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்.
உடற்கல்வி என்பது மாணவா்களின் மேம்பாட்டுக்கு முக்கியமானது. தமிழகத்தில் எத்தனைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன, எத்தனை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளனா் என்பன உள்ளிட்ட விவரங்களை வழங்கக் கோரி தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தேன். ஆனால், இந்தத் தகவல்களை வழங்க பொது தகவல் அதிகாரி மறுத்துவிட்டாா் என்று அதில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை (ஆக.8) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.