திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட பார்வையற்றோ சங்க கூட்டமைப்புத் தலைவர் சரவணன், பொதுச்செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்டிக் கடை வைத்துக்கொள்ள இட அனுமதி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானிய கடனுக்கான வயது வரம்பை 45 வயதிலிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும். நாகமங்கலம் பார்வையற்றோர் குடியிருப்பில் சேதமடைந்த வீடுகளை தமிழக அரசு புதிதாகக் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
திடீர் சாலை மறியல்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பார்வையற்றவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசாருக்கும், பார்வையற்றவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சென்ற ஏராளமான வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு போலீசார் பார்வையற்றவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த போராட்டத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியரக சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.