தமிழ்நாடு

சென்னையில் புதிய காவலர் குடியிருப்புக்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

DIN

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர்கள் குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.323 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும்  “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55 கோடியே 19 லட்சம்  மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள வீடுகள்  ஆகியவற்றை முதல்வர் இன்று திறந்து வைத்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (8.8.2022) சென்னை, கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் 186 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,036 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.

மேலும், உள்துறை சார்பில் 36 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் 32 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 2  காவல் துறை கட்டடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள்,  3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் மற்றும் 1 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கான பாசறை, 55 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை, புதுப்பேட்டைக்கு சென்று, புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் 100 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார். 

காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற  பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், சென்னை மாவட்டம் –  கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 186 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகள்:

ஈரோடு மாவட்டம்  – பெருந்துறை  ஆகிய இடங்களில் 5 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 32  காவலர் குடியிருப்புகள்;

சென்னை மாவட்டம் – எம்.ஜி,ஆர் நகரில் காவல் நிலையம், ஈரோடு மாவட்டம் – ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், கன்னியாகுமரி மாவட்டம் – கோட்டாரில்  போக்குவரத்து  ஒழங்கு பிரிவு காவல் நிலையம், என 3 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையக் கட்டடங்கள்;

நாகப்பட்டினம் மாவட்டம் – வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி வளாகத்தில் நிர்வாக அலுவலகக் கட்டடம்  என  4 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 காவல்துறை கட்டடங்கள்; 

திருநெல்வேலி மாவட்டம் – அம்பாசமுத்திரம் கிளை சிறைச்சாலையில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள  சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 11 குடியிருப்புகள்;

சென்னை மாவட்டம் – மணலியில் 13 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள  தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 80 குடியிருப்புகள்; 

திருப்பூர் மாவட்டம் – திருப்பூர் மற்றும் அவிநாசி, கோயம்புத்தூர் மாவட்டம் – பீளமேடு ஆகிய இடங்களில் 4 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள்;

சென்னை மாவட்டம் – மணலியில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான பாசறை கட்டடம்; 

“உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் சிவகங்கை வட்டம் – பையூர் பிள்ளைவயல், சேலம் மாவட்டம் – தாரமங்கலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம்  - கண்டம்பாக்கம் ஆகிய இடங்களில் 55 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீருடை பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள 253 வீடுகள்;

சென்னை மாவட்டம், புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் 100 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகள்;

என மொத்தம், 378 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை,  சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 3 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப., முதல்வரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு. நா.எழிலன்,  ஐ.பரந்தாமன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர்  சுனில் குமார் சிங், இ.கா.ப., தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் பி.கே.ரவி, இ.கா.ப., தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT