ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையப் பிரதிநிதிகளுக்கு ஊதியம், படிகள் வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த திருத்த மசோதாவை சட்டப் பேரவையில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு மதிப்பூதியம், படித் தொகைகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்குப் பதிலாக ஊதியங்கள், படித் தொகைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது எனவும், அதற்கேற்ற வகையில் சட்டத்தை திருத்த வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தாா் அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ்.