நீதித்துறையில் உள்ளூர் மொழிகளை ஊக்குவித்ததற்காக பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மாநாடு புதுதில்லியில் விஞ்ஞான பவனில் இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி என்.வி.ரமணா, உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகல், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் இதில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரியும் கலந்து கொண்டனர். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம் என்று கூறிய பிரதமர், அப்போதுதான் நீதிபரிபாலன முறையில் தொடர்பு உள்ளதாக மக்கள் உணர்வார்கள் என்றும், அதனால் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இதையும் படிக்க- சாதிக்காக மாணவர் கொலையா? தேமுதிக விஜயகாந்த் கண்டனம்
நீதிபரிபாலனத்தில் மக்களின் உரிமை இதன் மூலம் வலுப்படும். உள்ளூர் மொழிகள் தொழில்நுட்பக் கல்வியிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்தக் கருத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், “நீதித்துறையில் உள்ளூர் மொழிகளை ஊக்குவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும், அனைவருக்கும் சமநீதி கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.