சேலத்தில் சந்தேகத்தினால் மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கோவிந்தராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரும் அவரது மனைவியும் 15 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மேலும் ஜெயக்குமாரின் மனைவி சங்கீதா படித்து பட்டம் பெற்றவர். அவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா அலைபேசியில் உறவினர்களுடன் பேசினாலும் ஜெயக்குமார் சந்தேகப்பட்டு குடும்பத்தில் தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில் வியாழக்கிழமை சங்கீதாவின் வீட்டிற்கு போன் செய்த ஜெயக்குமார், சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த சங்கீதாவின் பெற்றோர், உடலில் காயங்கள் இருந்ததால் மல்லியகரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் சங்கீதாவை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து ஜெயக்குமாரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.