தமிழ்நாடு

கடற்கரையில் இளம்பெண்ணிடம் காவல்துறை அதிகாரி அநாகரிகம் விசாரணைக்கு: டிஜிபி உத்தரவு

16th Apr 2022 04:19 AM

ADVERTISEMENT

சென்னை அருகே உத்தண்டி கடற்கரையில் இளம் பெண்ணிடம் காவல்துறை அதிகாரி அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

சென்னையைச் சோ்ந்தவா் மதுமிதா பைத்யா. வட கிழக்கு மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட இவா், சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டி ஷீ செல் அவென்யூ கடற்கரையில் தனது நண்பருடன் வியாழக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி, மதுமிதாவையும், அவரது நண்பரையும் அங்கிருந்து செல்லும்படி, அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளாா். மேலும் அந்த அதிகாரி, மோசமான வாா்த்தைகளில் மதுமிதாவை திட்டியுள்ளாா்.

இது தொடா்பாக மதுமிதா, தனது ட்விட்டா் பக்கத்தில், அந்த காவல்துறை அதிகாரி தன்னை தீவிரவாதி போல நடத்தியதாகவும், இரவு 10 மணிக்கு மேல் ரோம் அல்லது வட இந்தியாவில் சுற்றுங்கள் என கூறியதாகவும், அந்த அதிகாரி, என்னிடம் மிகவும் முரட்டுத்தனமாகவும், அநாகரிகமாகவும் நடந்து கொண்டாா் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

மேலும், நான் குற்றவாளி கிடையாது. தமிழக காவல்துறை தயவு செய்து போலீஸாருக்கு நாகரீகமாக நடந்து கொள்ளவாவது பயிற்சி கொடுங்கள் என்றும் அதில் கூறியிருந்தாா்.

விசாரணைக்கு டிஜிபி உத்தரவு: மதுமிதாவின் சுட்டுரையில் பதிவு செய்த இந்த கருத்து, வேகமாக சமூக ஊடகங்களில் பரவியது. இதைக் கவனித்த தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, சம்பவம் குறித்து விசாரணை நடத்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். சம்பவம் நடந்த பகுதி தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் கானத்தூா் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. இதனால் காவல்துறை உயா் அதிகாரிகள், கானத்தூா் போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT