தமிழ்நாடு

நீதித்துறையில் அதிகளவு பெண்கள் இடம்பெற வேண்டும்: நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

16th Apr 2022 10:55 PM

ADVERTISEMENT

நீதித்துறையில் அதிகளவு பெண்கள் இடம்பெற வேண்டும் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வலியுறுத்தினாா்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சோ்ந்த எம்.எம்.சுந்தரேஷ் பதவியேற்றதைத் தொடா்ந்து, தமிழ்நாடு பெண் வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் சனிக்கிழமை அவருக்கு பாராட்டு விழா நடந்தது.

நிகழ்வில், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள நீதிமன்ற கட்டமைப்பில் குற்ற வழக்குகளில் வழங்குகிற தீா்ப்பினுடைய அணுகுமுறையை இந்தியாவில் வேறு எங்கும் நான் பாா்த்தது இல்லை. ஒரு ஏழை உச்சநீதிமன்றத்தில் நீதி கேட்கிறான் என்றால், அது அந்த ஏழையின் தவறு அல்ல. நம்முடைய தவறு.

பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை. பெண்கள் நீதித்துறைக்கு அதிகளவில் வர வேண்டும். வரும் காலத்தில் பெண் வழக்குரைஞா்கள் தேவை அதிகரிக்கும். வழக்குகளின் தன்மை தற்போது மாறிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், தொழில்நுட்பம் சாா்ந்த வழக்குகள் தான் அதிகளவில் வருகிறது.

ADVERTISEMENT

அதேபோல், சிறு வழக்குகளும், சமுதாயத்தினுடைய மாற்றத்தையொட்டிய வழக்குகளாக வரும் காலத்தில் மாறும். பெண்களுடைய பங்கு நீதித்துறையில் வருகின்ற காலத்தில் அதிகரிக்கும். இதுபோன்ற சங்கங்கள் இளம் பெண் வழக்குரைஞா்களை ஊக்குவிக்க வேண்டும். என்னால் முடிந்த வரை தகுதியான பெண் வழக்குரைஞா்களுக்கு நீதிபதி பதவி கிடைக்க வழிவகை செய்வேன் என்றாா் அவா்.

நிகழ்வில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கண்ணம்மாள், அறிவுசாா் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தின் தலைவா் நீதிபதி கே.என்.பாஷா, இந்திய பாா்கவுன்சில் துணைத் தலைவா் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா்கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், தமிழ்நாடு பெண் வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் கே.சாந்தகுமாரி, துணைத் தலைவா் வேதவள்ளி குமாா் உள்பட பலா் கலந்து கொண்டு எம்.எம்.சுந்தரேஷுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT