அரசியலை புகுத்தி உங்கள் கட்சியை பலப்படுத்துவது நடக்கவே நடக்காது என்று வானதி சீனிவாசனின் கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“ஏழை மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை அதிகரித்துக் கொண்டு போகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, மாநில அரசுக்கு வரவேண்டிய நிதிகளை பெறுவதற்கு உறுதுணையாக இருந்து அதை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதை புரிந்து நடக்க வேண்டும். தேவையில்லாமல் அரசியலை புகுத்தி உங்கள் கட்சியை பலப்படுத்த நினைத்தால், அது நடக்கவே நடக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.