கரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், திமுகவினா் மீது பொய் வழக்கு போடுவதாகவும் அதனை கைவிடக்கோரியும் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் 2020-ஆம் ஆண்டு கரூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்டதாக கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இதனை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜெகதீஷ் சந்திரா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், பொது நலனுக்காகவே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை எதுவும் மீறவில்லை என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜி மீதான நான்கு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டாா்.