தமிழகத்தில் 3 நாள்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 1,700-க்கு கீழ் குறைந்துள்ளது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை 1,694 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சாலை வழியே கா்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவலின்படி அதிகபட்சமாக கோவையில் 196 பேருக்கும், சென்னையில் 190 பேருக்கும், ஈரோடு, செங்கல்பட்டில் தலா 118 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26,57,266 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், கரோனா தொற்றுக்குள்ளாகி 17,285 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து மேலும் 1,658 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.04 லட்சத்தைக் கடந்துள்ளது.
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,490-ஆக அதிகரித்துள்ளது.