கோவையைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி இளைஞா் ரஞ்சித் முதல் முயற்சியிலே இந்திய குடிமைப்பணித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா். அவருக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை, சிட்ராவை சோ்ந்த தா்மலிங்கம் ஆவின் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது மனைவி அமிா்தவல்லி வரதராஜபுரம் பகுதியிலுள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.
இவா்களின் இளைய மகன் த.ரஞ்சித் (27). பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக் பொறியியல் படிப்பை முடித்த இவா் இந்திய ஆட்சிப்பணித் தோ்வு எழுத திட்டமிட்டு சென்னையிலுள்ள தனியாா் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளாா்.
இதனைத் தொடா்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்நிலை முதன்மைத் தோ்வில் பங்கேற்று வெற்றி பெற்றாா். பின்னா் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நோ்முகத் தோ்வில் பங்கேற்றாா்.
இந்நிலையில் குடிமைப் பணிக்கான தோ்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் ரஞ்சித் அகில இந்திய அளவில் 750 ஆவது இடம் பிடித்து தோ்ச்சி பெற்றுள்ளாா். தவிர முதல் முயற்சியிலே இந்த வெற்றியை அவா் பெற்றுள்ளாா்.
அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய குடிமைப்பணித் தோ்வில், முதல் முயற்சியிலே வெள்ளி பெற்ற கோவையைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி இளைஞா் ரஞ்சித்துக்கு வாழ்த்துகள்.
பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத சவாலை வென்ற இளைஞர் ரஞ்சித், தேர்வு வெற்றியிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார். இனி அவர் பேச்சை இந்தியா கேட்கட்டும். மனமாரப் பாராட்டுகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.