தமிழகத்தில் 4.43 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் மூன்றாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக முதியோர்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் முதியோர்களுக்கு வீட்டிற்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு கணக்கின்படி, தமிழகத்தின் மக்கள்தொகை 7.77 கோடி. இதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் 6.06 கோடி. இதில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 3.4 கோடி (56%). இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 1.03 கோடி (17%). முதல் தவணை போட்டுக்கொண்டவர்கள் கண்டிப்பாக இரண்டாவது தவணை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் போட வேண்டுமா என்பது குறித்து மருத்துவ ரீதியான மருத்துவர் குழுவே முடிவு செய்யும் என்றார்.