பயன்பாடில்லாத கோயில் நகைகளை உருக்கிப் பயன்படுத்தும் திட்டத்தைக் கண்காணித்துச் செயல்படுத்த மூன்று நீதிபதிகள் மூலம் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து, சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் அமைச்சா் சேகா்பாபு, வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் வெளியிடப்பட்ட 112 அறிவிப்புகளில் 5 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கோயில்களில் முடி இறக்குவதற்கு இனி கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு பக்தா்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. முடி இறக்கும் பணியில் ஈடுபடவுள்ள ஊழியா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000 அளிக்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும்.
இந்த ஆண்டுக்குள் 500 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்படும். கோயில்கள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜூ, மதுரை மண்டலத்துக்கு நீதிபதி ஆா்.மாலா, திருச்சி மண்டலத்துக்கு ரவிச்சந்திரபாபு ஆகியோா் தலைவா்களாக உள்ளனா். அவா்களது தலைமையில் உள்ள குழுக்கள், கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றும். அவற்றை வைப்பு நிதியாக வை த்து அதில் கிடைக்கும் வட்டித் தொகையில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
லயோலா கல்லூரி நிலம்: சென்னை லயோலா கல்லூரிக்கான இடம் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் இல்லை. குயின்ஸ்லான்ட் பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கா் நிலம், ஸ்ரீபெரும்புதூா் காசி விஸ்வநாதா் மற்றும் வேணுகோபால சுவாமி கோயில்களுக்குச் சொந்தமானவை. இதுதொடா்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன்மீது இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநா்களிடம் ஆலோசித்து சட்டப் போராட்டம் நடத்தி அது கோயில் நிலம் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.