2021-2022ல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பருவ பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகளை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2021-2022ம் ஆண்டு சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் மானாவாரி மாவட்டங்களுக்கு 30 சதவிகிதம் வரை, பாசன வசதி உள்ள மாவட்டங்களுக்கு 25 சதவிகிதம் வரை ஒன்றிய அரசும் 60 முதல் 65 சதவிகிதம் வரை மாநில அரசு பங்குடனும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, நடப்பாண்டில் சம்பா பருவத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல்வரின் உத்தரவுக்கிணங்க அரசாணை, வேளாண்மை - உழவர் நலத்துறையால் 26.08.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
சம்பா பருவத்தில் சம்பா நெற்பயிர், பருத்தி, மக்காச்சோளம் மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்கள் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு கடன்பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கடன்பெறா விவசாயிகள் “பொது சேவை மையங்கள்” மூலமாகவும் 23.09.2021 முதல் ஒன்றிய அரசின் தேசிய பயிர் காப்பீடு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். இப்பயிர்கள் காப்பீடு செய்வதற்கான அறிவிக்கை 26.08.2021 அன்றே வெளியிடப்பட்டு விவசாயிகள் காப்பீடு செய்ய ஏதுவாக 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க - விராத் கோலி, படிக்கல் அதிரடி: சென்னைக்கு 157 ரன்கள் இலக்கு
எனவே விவசாயிகள் சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்வது குறித்தான நடப்பு தகவல்களை “உழவன்” செயலி மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வேளாண் துறை அலுவலர்களை சந்தித்து தெரிந்து கொண்டு பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.