பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் நாளை மறுநாள் 1600 தீவிர கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்கள் அனைவரையும் கரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, முதல்வரின் உத்தரவின்படி, அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி பகுதிகளில் 26.08.2021 அன்று நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கும், 12.09.2021 அன்று நடைபெற்ற 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,91,350 கரோனா தடுப்பூசிகளும், 19.09.2021 அன்று நடைபெற்ற 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2,02,931 கரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் பொழுது பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு அதிகளவில் பயனடைகின்றனர். எனவே, வருகின்ற 26.09.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 1600 தீவிர கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மீண்டும் நடைபெற உள்ளன.
இதையும் படிக்க- தமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கரோனா
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 26.09.2021 அன்று நடைபெறவுள்ள 1,600 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 - 2538 4520, 044 - 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.
பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் இந்தத் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.