தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவர்கள் சந்திப்பு

DIN

முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லிபாபு ஆகியோர் சந்தித்து சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றியதற்கும், நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கோருகிற மசோதா நிறைவேற்றியதற்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றியதற்கும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைத்ததற்கும், இடஒதுக்கீடு அமலாக்கப்பட்ட விதம் குறித்து கண்காணிக்க சமூக நீதி கண்காணிப்புக்குழு அமைத்ததற்கும், பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடுவது, விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சியை பெருமைபடுத்தும் அறிவிப்புகள், பாரதியார் பிறந்த நாளை பள்ளி குழந்தை விழா உள்ளிட்ட பல முற்போக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியும், பாராட்டுதல்களும் தெரிவித்தனர்.                
மேலும், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி நியமிக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. புதிய வேளாண் சட்டம் மூலம் விவசாயத்தை முற்றாக கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைத்து நாட்டை சூறையாட முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து செப்டம்பர் 27ல் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தை தமிழகத்தில் வெற்றியடைய செய்ய தி.மு.க. ஆதரவு நல்கிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அதற்கு முதலமைச்சர் ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம், அத்தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவிப்போம் என தெரிவித்தார்.    

இத்துடன் கீழ்க்கண்ட முக்கியமான பிரச்னைகள் குறித்து முதலமைச்சரிடம் மனு அளித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும் வற்புறுத்தப்பட்டது. 
1. தமிழகத்தில் சிறந்த ஆன்மீகவாதியாகவும் அதேசமயம் ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் மதவெறியை எதிர்த்து உறுதியாக போராடி வரும் பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளாளின் உயிருக்கு பாஜக - ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களால் விடுக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்திட அவருக்கு காவல் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் (மனு இணைக்கப்பட்டுள்ளது) 
2.  நெய்வேலி காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுப்பிரமணியன் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள இழப்பீட்டுத் தொகையினை வழங்கிட வேண்டுமெனவும் (மனு இணைக்கப்பட்டுள்ளது) 
3. மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகையினை உயர்த்தி வழங்கிட வேண்டுமெனவும் (மனு இணைக்கப்பட்டுள்ளது)
4. மத்திய கால கடன்களாக மாற்றப்பட்ட குறுகிய கால வேளாண் கடன் பாக்கிகளை ரத்து செய்திடவும் (மனு இணைக்கப்பட்டுள்ளது)
5. பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் (மனு இணைக்கப்பட்டுள்ளது) - இக்கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT