ஆத்தூர் அருகே புதியதாக வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை மாவட்டத் தலைவர் வ.மணிகண்டன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் புதியதாக அமைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்கள்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை பாஜக கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்தும், கொடிக்கம்ப கட்டையையும், அதில் பொறிக்கப்பட்டிருந்த தாமரையை உடைத்து மர்ம நபர்கள் கீழே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த பாஜக நகர தலைவர் செந்தில்குமார் தலைமையில் பாஜகவினர் திரண்டததால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் நகர காவல் உதவி ஆய்வாளர் டி.மூர்த்தி தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.