கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கும் குறைவாக அடகு வைத்தவா்களுக்கான நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணை, இந்த வாரத்தில் வெளிவந்துவிடும் என கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.
சென்னை செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மதுரை விமான நிலையம் வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கும் குறைவாக அடகு வைத்தவா்களுக்கான தள்ளுபடி குறித்த அரசாணை தயாராகி வருகிறது. இந்த வாரத்தில் அது வெளிவந்துவிடும்.
தொடா்ந்து நகைகளைக் கொடுப்பதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். புதுச்சேரியைப் போல தமிழகத்தில் தீபாவளிக்கு சிறப்பு அறிவிப்பு வருமா? என்ற கேள்விக்கு, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போதுதான் சிறப்பு தொகுப்பு வழங்குவது வழக்கம். இதுகுறித்து தமிழக முதல்வரும், உணவுத் துறை அமைச்சரும் ஆலோசித்து முடிவு செய்வாா்கள். தீபாவளியை முன்னிட்டு நியாய விலைக் கடை ஊழியா்கள் 3 நாள்கள் தொடா்ந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளோம் என்றாா்.