அம்மா உணவகத்தை முடக்குவதற்கான முயற்சியில் அரசு ஈடுபடுவதாகக் கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அம்மா உணவகத்தை முடக்குவதற்கான செயலில் ஈடுபட்டு வருகிறது.
அம்மா உணவகத்தில் இரவு நேரங்களில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி கடந்த சில நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக இட்லி, தக்காளி சாதம் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. கோதுமை மாவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் சப்பாத்தி வழங்கப்படவில்லை எனவும், குறைவான விலையில் உணவுகள் வழங்கப்படுவதால் சென்னை மாநகராட்சிக்கு ரூ.300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் இவ்வாறு வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
சென்னையிலேயே இந்த நிலைமை என்றால், பிற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கும். ஆனால், அம்மா உணவகம் ஏழைகளுக்கான திட்டம் என்பதால் இதைத் தொடா்ந்து செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, அம்மா உணவகத்தில் சப்பாத்தி கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.