உயிரிழந்த மீனவா் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மூன்று மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாகவும், இதனால் மீனவா்கள் சென்ற படகு கடலில் மூழ்கியதாகவும் தெரிய வந்தது. அவா்களை மீட்டுத் தருமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தாா்.
மூன்று மீனவா்களில் இரண்டு போ் இலங்கை கடற்படை வசமிருந்த நிலையில், மற்றொரு மீனவரான ராஜ்கிரண், இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த ராஜ்கிரண் குடும்பத்துக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், முதலமைச்சா் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.