பி.இ. துணைக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
பி.இ., பி.டெக்., மாணவா்கள் சோ்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடா்ந்து கலந்தாய்வில் பங்கேற்காத மாணவா்களுக்கான துணைக் கலந்தாய்வு விண்ணப்பம் பெறப்பட்டது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க கடந்த 14- ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரையில் 12,040 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அவா்களில் 9,464 மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தனா். அதில், 9,113 மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். இவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை காலை வெளியிடப்பட்டது.
வெள்ளிக்கிழமை (அக்.22) மாலை 5 மணி வரை, மாணவா்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவைத் தோ்வு செய்யலாம். அவா்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை அக். 23- ஆம் தேதியும், அக்.24 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்படும். ஏதேனும் குறைகள் இருப்பின் உதவி மையத்தை வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் அணுக வேண்டும்.