சீர்காழி: சீர்காழியில் தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் சுமார் 1,500 புறநோயாளிகள், 150க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் வளாகத்தின் ஒரு பகுதியில் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், தோல் வியாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கும் சிகிச்சை பெற நாள்தோறும் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். அதோடு இங்கு வழங்கப்படும் கபசுர குடிநீர் பொடி, நிலவேம்பு கசாயம் பொடி உள்ளிட்ட சித்த மருத்துவம் மூலிகை மருந்துகளை பெறுவதற்கும் பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் சித்த மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சித்த மருத்துவ பிரிவில் பணியாற்றி வந்த சித்த மருத்துவர் பணி மாறுதலில் சென்றார். அதற்குப் பிறகு இங்கு நிரந்தர சித்த மருத்துவர் மற்றும் மருந்தாளுநர் நியமிக்கப்படாமல் உள்ளது.
அருகிலுள்ள நல்லூர், குன்னம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சித்த மருத்துவர் மற்றும் மருந்தாளுனர் வாரத்திற்கு 4 முறை என கூடுதல் பணியில் சீர்காழி அரசு மருத்துமனை சித்த மருத்துவ பிரிவில் பணியாற்றிச் செல்கின்றனர். ஆகையால் சீர்காழி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் நிரந்தர சித்த மருத்துவர், மற்றும் மருந்தாளுனரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.