சென்னை விமான நிலையத்தில், ரூ.1.12 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் தொடா்புடைய மூவா் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துபை மற்றும் சாா்ஜாவில் இருந்து பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கிருந்து வெவ்வேறு விமானங்கள் மூலமாக வெள்ளிக்கிழமை சென்னை வந்த 5 பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினா் தடுத்து நிறுத்தினா்.
அவா்களை சோதனையிட்டபோது, அவா்களது மலக்குடலில் ரூ.1.12 கோடி மதிப்பிலான 2.55 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் ரூ.4.7 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்களை அவா்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், மூன்று பயணிகளைக் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.