காங்கயம்: காங்கயத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு துவக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிமுக கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து, 50 ஆவது ஆண்டு ஞாயிற்றுக்கிழமை (அக்.17) துவங்குகிறது. இதனை முன்னிட்டு, காங்கயம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில் கட்சிக் கொடியேற்றி வைத்தும், மறைந்த முன்னாள் முதல்வர்களும், அதிமுக பொதுச் செயலாளர்களுமான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலர் ஏ.பி.துரைசாமி, காங்கயம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சி.கந்தசாமி, மாவட்ட வர்த்தக பிரிவு துணைச் செயலர் என்.பாலகிருஷ்ணன், 3 ஆவது வார்டு செயலர் பி.கருப்புசாமி உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.