காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் உணவகங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் வரவேற்பு அறை, சமையலறை, பயணிகள் தங்கும் அறைகள் ஆகியனவற்றை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு செய்தார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளோடு கூடிய உணவகங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் அறைக்கான கட்டணத்தை அதிக அளவில் இல்லாமல் குறைக்கவும், தமிழ்நாடு ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள திறந்த வெளி இடங்களில் உள்ள திறந்த வெளி உணவகங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய உணவுகள் மட்டுமின்றி வட இந்திய உணவுகளையும் விற்பனை செய்யவும் இதற்கென திறமையான சமையல் மாஸ்டர்களையும் நியமித்து வருகிறோம். தமிழ்நாடு ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள இடங்களில் பூங்காக்கள் அமைக்கவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வசதிகளும் செய்யப்படும்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா வரும் மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் வந்திருப்பதையடுத்து சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தமிழக முதல்வரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் உள்ள விடுதியுடன் கூடிய அரசு சுற்றுலா உணவகங்களை இணையத்திலேயே பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக காஞ்சிபுரம் தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். பின்னர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் அருகில் கட்டப்பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான யாத்ரிநிவாஸ் கட்டிடடத்தையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அமைச்சருடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, எம்.பி.க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் உட்பட கட்சிப் பிரமுகர்கள் பலரும் உடன் இருந்தனர்.