திருப்பூர்: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சிலநாள்களாக மாலை வேளைகளில் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும், இரவு நேரங்களில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.
உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்
இந்த நிலையில், திருப்பூர் மாநகரில் சனிக்கிழமை காலை 10 மணி முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருப்பூர் பழைய பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், புஷ்பா ரவுண்டானா, ஊத்துக்குளி சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணி அளவில் கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையானது சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரையிலும் சுமார் ஒன்றே கால் மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக அவிநாசி சாலையில் உள்ள புஷ்பா ரவுண்டானா, ஊத்துக்குளி 1, 2 ஆவது ரயில்வே கேட்கள், அணைப்பாளையம் தரைப்பாலம் ஆகியவற்றில் மழை நீர் வழிந்தோடியதுடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இதனால் இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள கொங்கு மெயின்ரோடு, எம்.எஸ்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை நீருடன், மழை நீரும் வழிந்தோடியது.