சீர்காழி: சீர்காழி அருகே கணக்கெடுக்க வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சியில் குமரக்கோட்டகம், வேம்படி, இருவகொல்லை, கேவரொடை, கூழையார், வேட்டங்குடி, வெள்ளக்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் பயிரிடப்பட்ட இரண்டறை மாதங்களே ஆன சம்பா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் இந்த பகுதிக்கு கணக்கெடுக்கும் பணிக்கு வந்திருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக 1 ஹெக்டேருக்கு ரூ. 75 ஆயிரம் வழங்க வேண்டும், அரசு சார்பில் நிவாரணமாக 1 ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் இடுபொருளாக வழங்கப்படுவது தங்களுக்குத் தேவையில்லை என நீரில் அழுகிய பயிர்களை கையில் ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.