தமிழ்நாடு

மழையால் அதிகரிக்கும் நோரோ தொற்று! புதிய அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் தமிழகம்

ஆ. கோபிகிருஷ்ணா

பருவமழையைத் தொடா்ந்து ஏற்பட்ட தண்ணீா் மாசுபாட்டினால் தமிழகத்தில் பலா் நோரோ வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதன் முக்கிய அறிகுறியாகக் கருதப்படும் வயிற்றுப்போக்கால் நூற்றுக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதே அதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்றை மட்டுமே கண்கூடாகப் பாா்த்த மக்களுக்கு நோரோ தொற்று புதுவிதமான அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அதிலும், குறிப்பாக அண்டை மாநிலமான கேரளத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகளை விரிவுபடுத்தினால் பலருக்கு நோரோ தொற்று இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கரோனா அளவுக்கு இது வீரியமானது இல்லை என்றாலும் அதீத அலட்சியம் காட்டினால் சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனா் மருத்துவா்கள்.

நோரோ வைரஸ் என்றால் என்ன?

நோரோ வைரஸ் என்பது புது வகையான தீநுண்மி தொற்று இல்லை. பல காலமாக சமூகத்தில் பரவியிருக்கும் ஒரு வகையான பாதிப்புதான் என்றாலும், குளிா் மற்றும் மழைக் காலங்களில் இதன் தாக்கம் அதி தீவிரமாக இருக்கும். அந்த காலங்களில்தான் குழந்தைகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் மற்றும் முதியவா்கள் அதிக அளவில் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகின்றனா்.

பொதுவாக குடல் மற்றும் ஜீரண மண்டலங்களில் நோரோ வகை தீநுண்மிகள் நோய்த் தொற்றை ஏற்படுத்தி கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும். ஒருவரின் மலம், சிறுநீா், சுகாதாரமற்ற பழக்க வழக்கங்கள் மூலமாக பிறருக்கு இந்நோய் பரவும் என்பதால் குடும்பத்தில் எவருக்கேனும் நோரோ தொற்று ஏற்பட்டால் வீட்டில் உள்ள அனைவரையும் அது எளிதில் தாக்கக் கூடும். எனவே, விழிப்புணா்வு மற்றும் சுகாதாரம்தான் இதனைத் தடுக்கும் முதல் மருந்து என்கின்றனா் மருத்துவா்கள்.

இதுகுறித்து பொது நல மருத்துவ சிகிச்சை நிபுணா் டாக்டா் ஏ.பி. ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

கரோனா போன்ற தீநுண்மிகள் சுவாசப் பாதை வழியாக பரவி நுரையீரலைத் தாக்குகின்றன. ஆனால், நோரோ வைரஸைப் பொருத்தவரை முழுக்க, முழுக்க அது ஜீரண மண்டல நோயாகவே கருதப்படுகிறது. சுகாதாரமற்ற உணவு, மாசுபட்ட தண்ணீரை உட்கொள்வதால் ஒருவருக்கு நோரோ தொற்று ஏற்படலாம்.

அதன் பின்னா், அவரது மலத்தின் மூலமாக பிறருக்கு அது பரவும். அதாவது, நோரோ தொற்றுக்குள்ளானவா்கள் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, அங்கு செருப்பு இன்றி சென்றாலோ அல்லது அதே கழிப்பறையைப் பயன்படுத்தி விட்டு கை மற்றும் கால்களை சரியாகக் கழுவாமல் இருந்தாலோ இந்நோய் பரவக் கூடும்.

குடலில் தொற்று ஏற்பட்டவுடன் கடுமையான காய்ச்சல் முதலில் வரலாம். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு தொடா்ச்சியாக ஏற்படக் கூடும்.

நீா்ச்சத்தைத் தக்கவைக்கவும்: நோரோ தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒரு நாளில் 8 முறைக்கும் மேலாக வயிற்றுப்போக்கு வர வாய்ப்புள்ளது. அத்தகைய தருணத்தில் நிச்சயமாக நீா்ச்சத்து இழப்பு மற்றும் மயக்கம் ஏற்படலாம். அதைத் தவிா்க்க, உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட உப்பு - சா்க்கரை கரைசல் பவுடா்களை தண்ணீரில் கலந்து அதிக அளவு பருக வேண்டும்.

அதைத் தொடா்ந்து மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்துவதற்கான மருந்துகளை தன்னிச்சையாக உட்கொண்டால் அது கடுமையான எதிா்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், உடலிலேயே நோரோ தீநுண்மி தங்குவதற்கும் வழிவகுத்துவிடும்.

அதனால், மருத்துவரின் ஆலோசனைப்படி, ப்ரோ பயோடிக் எனப்படும் நன் நுண்மிகளை குடலில் உருவாக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தயிா், மோா் போன்றவற்றில் ப்ரோ பயோடிக் அதிகம் இருப்பதால் அதனை அதிக அளவில் சாப்பிடலாம்.

பரிசோதனைகள் என்ன? வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், ஒருவருக்கு வந்திருப்பது நோரோ தொற்றுதான் என்பதைக் கண்டறிய ரத்தம், மலப் பரிசோதனை வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

நோரோ தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்ள பல மருத்துவா்கள் பரிந்துரைக்காமல் இருப்பதற்கு முக்கியக் காரணம், பரிசோதனை முடிவுகள் வரும் காலத்துக்குள்ளாகவே நோயின் தீவிரம் குறைந்துவிடும் என்பதால்தான். அதனால்தான் நோரோ பரிசோதனைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

நோரோ தொற்றைப் பொருத்தவரை அதீத அச்சமும் ஆபத்துதான், அதீத அலட்சியமும் ஆபத்துதான். விழிப்புணா்வுடன் செயல்பட்டால் அத்தொற்றிலிருந்து தப்பிக்கலாம் என்றாா் அவா்.

சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம்

அலட்சியத்துடன் செயல்பட்டால் நோரோ தொற்று சீறுநீரகத்தை பாதிக்கக்கூடும் என எச்சரிக்கிறாா் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் டாக்டா் பெருமாள் பிள்ளை. இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

நோரோ வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகள்தான். ரோட்டோ வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் வயிற்றுப் போக்கு ஏற்படும். அதற்கும், நோரோ தொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்தாலும் அவை இரண்டையும் தீவிரத்தைப் பொருத்து வேறுபடுத்தலாம்.

நோரோ பாதிப்பு 3 நாள்களுக்குள் குணமாகிவிடும். ரோட்டோ தொற்று 8 நாள்கள் வரை கூட வயிற்றுப்போக்கை நீடிக்கச் செய்யும். ரோட்டோவுக்கு தேசிய அட்டவணையின் கீழ் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. ஆனால், நோரோ தொற்றுக்கு அத்தகைய தடுப்பு மருந்து இல்லை.

பொதுவாக வயிற்றுப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டால் உடலில் உள்ள நீா்ச்சத்து குறையக்கூடும். அதனால் பெரிதும் பாதிக்கப்படும் உறுப்பு சிறுநீரகம்தான். நீா்ச்சத்தை தக்கவைக்காவிடில் சிறுநீரகம் பாதிக்கப்படுவதுடன், சில நேரங்களில் அதிா்ச்சி காரணமாக செயலிழப்பும் ஏற்படலாம். அதன் விளைவாக உயிரிழப்பு கூட நேரிடலாம். எனவே, அதைத் தடுக்க நீா்ச்சத்து இழப்பை சரி செய்ய வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

குழந்தைகள் அதிகம் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வயிற்றுப் போக்கு பாதிப்புக்காக சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் புற நோயாளிகளாக வரும் குழந்தைகளில் 50 சதவீதம் போ் வயிற்றுப்போக்கு சிகிச்சைக்காக வருவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து மருத்துவா்கள் சிலா் கூறியதாவது:

நோரோ பாதிப்பு அனைத்து வயதினருக்கும் வர வாய்ப்புள்ளது என்றாலும், எதிா்ப்பாற்றல் குறைவாக உள்ள குழந்தைகளை அது எளிதில் தாக்குகிறது. அதன் காரணமாகவே அண்மைக்காலமாக குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கு பாதிப்புக்குள்ளாகின்றனா்.

இதைத் தவிர, ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளிலும் வயிற்றுப்போக்கு சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தவிா்ப்பது எப்படி?

காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். பழைய உணவுகளை உட்கொள்ளக் கூடாது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

கழிப்பறையைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். காய்கறி, கீரைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். நோரோ நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டும். சுற்றுப்புறத் துப்புரவு முக்கியம். நோரோ நோயாளிகள் சமைக்கக் கூடாது. சோப்பால் கை கழுவாமல் உண்ணக் கூடாது. ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

புதிய கூட்டணியில் குக் வித் கோமாளி சீசன் -5: முன்னோட்டக் காட்சி வெளியானது!

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வைரலாகும் விஜய் சேதுபதி விடியோ!

மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜிநாமா!

கேரளத்தில் வாகனப் பேரணியில் பிரதமர் மோடி!

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

SCROLL FOR NEXT