தமிழகத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து மீட்புப் பணிகளுக்கான நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் சென்னை பெருநகரம் ஸ்தம்பித்துள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும். அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
எனவே, தமிழகத்தில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் உதவி தேவை. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய நிதித்துறை அமைச்சகம் விடுவிக்க பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.