பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 53 அடியாக உயர்ந்ததால் இன்று இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கடந்த மே 20ம் தேதி நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்ததையடுத்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
மஞ்சளாறு அணைக்கு புதன்கிழமையன்று அணைக்கு நீர்வரத்து 45 க.அடியாக இருந்தநிலையில் அணையின் நீர் மட்டம் 53 அடியாக உயர்ந்ததையடுத்து இரண்டாம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும் 55 அடியாக உயர்ந்தால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் உபரிநீர் அணைத்தும் மஞ்சளாற்றின் வழியாக வெளியேற்றப்படும். எனவே மஞ்சளாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, கொங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் சிவஞானபுரம் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.