ஈட்டிய விடுப்பை சரண் செய்து தொகையாகப் பெறும் நடைமுறையை ரத்து செய்த உத்தரவு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
ஆண்டுக்கு 15 நாள்கள் அல்லது இரண்டு ஆண்டுகளில் 30 நாள்களை ஈட்டிய விடுப்பாக சரண் செய்து தொகையாகப் பெறும் நடைமுறை உள்ளது. கரோனா நோய்த் தொற்று காரணமாக அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு இந்த நடைமுறையை ரத்து செய்து கடந்த ஏப்ரலில் தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவானது சட்டப்படி அமைக்கப்பட்ட அனைத்து அமைப்புகள், மாநிலக் கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தாக்குதல் காரணமாக, நிதி உள்ளிட்ட வளங்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அதனை கரோனா நோய்த் தொற்றுக்காக செலவிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஈட்டிய விடுப்புகளை சரண் செய்து தொகையாகப் பெறும் நடைமுறை மேலும் ஓராண்டுக்கு அதாவது அடுத்த ஆண்டு (2022) மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.