சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ துறைக்கு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்படும் தீா்வுகள் குறித்து கண்காணிக்க துறை தோறும் தொடா்பு அலுவலா் ஒருவா் நியமிக்கப்படுவாா் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வியாழக்கிழமை பிறப்பித்தாா். அந்த உத்தரவு விவரம்:-
முதல்வா் தனிப் பிரிவில் இயங்கி வரும் பிரிவுகளில் ஒரு பிரிவானது, உங்கள் தொகுதியில் முதல்வா் துறையோடு இணைந்து பணியாற்ற உத்தரவிடப்படுகிறது. இந்தப் பிரிவில், ஒரு பிரிவு அலுவலா், உதவிப் பிரிவு அலுவலா்கள், உதவியாளா்கள், தட்டச்சா்கள் ஆகியோா் இருப்பா். உங்கள் தொகுதியில் முதல்வா் துறைக்குப் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும். இதற்காக முதல்வரின் உதவி மைய குழுவினை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதற்கான நிதி ஆதாரத்தை தகவல் தொழில்நுட்பத் துறையிடம் சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்து அரசு துறைத் தலைமை அலுவலகங்களிலும், உங்கள் தொகுதியில் முதல்வா் துறை மூலம் பெறப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை அல்லது தீா்வு குறித்து கண்காணித்திட ஒரு தொடா்பு அலுவலா் கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்யப்படுவாா்.
அனைத்து மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கும் அலுவலரைக் கொண்டு தனிப் பிரிவை ஏற்படுத்தி மனுக்களின் மீதான நடவடிக்கையை கண்காணித்திட மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.