தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என ஆட்சியர் கி. செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளது.
இந்திய வானிலை எச்சரிக்கை கணிப்பின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வருகிற மே 14 -ஆம் தேதி உருவாகி வடக்கு மற்றும் வடமேற்கு பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நகர தொடங்குகிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மே 16 -ஆம் தேதி மத்திய அரபிக்கடல் வழியாக செல்கிறது. இதனால் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழையானது லச்சத்தீவு, கேரளா மற்றும் தென் தமிழ்நாடு பகுதியில் மே 14 முதல் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே கடலில் மீன்பிடித்துக் கொண்டுள்ள மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீன்பிடி படகுகளை மீன்பிடி துறைமுகம் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.