தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சேமிப்புக் கிடங்கில் நிரப்பப்பட்டது.
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற படுக்கை வசதிகள் இல்லாமலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவும் உயிரிழக்கும்சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது.
இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமையிலான 9 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்சிஜன் நிரப்பிய முதல் கண்டெய்னர் லாரி நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
கண்காணிப்புக்குழுத் தலைவரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் ஆக்சிஜன் விநியோகத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மற்றும் ஸ்டெர்லைட் ஆலை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் ஆக்சிஜன் நிரப்பிய கண்டெய்னர் லாரி நெல்லை அரசு மருத்துவமனையை வந்தடைந்ததும் மருத்துவமனையில் இருந்த ஆக்சிஜன் சேமிப்புக்கிடங்கில் லாரியில் இருந்த ஆக்சிஜன் நிரப்பப்பட்டது.