கோவை: உலக செவிலியர் தினத்தையொட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை மருத்துவமனை டீன் ரவீந்திரன் கௌரவித்தார்.
சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில், ஏராளமான செவிலியர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், பங்கேற்று மருத்துவமனை டீன் ரவீந்திரன் பேசியதாவது: நீங்கள்தான் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பவர்களாக உள்ளீர்கள். நோயாளிகளின் கூடவே இருந்து அவர்கள் குணமடைந்து வீடு செல்லும் வரை பார்த்துக் கொள்வது நீங்கள்தான். கரோனா காலத்தில் நோயாளிகளுக்கு நீங்கள் செய்யும் சேவை மகத்தானது மட்டுமின்றி, போற்றுதலுக்குரியது என்றார்.
தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கும்போது, உணர்ச்சிவசப்பட்ட முதல்வர் ரவீந்திரன் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர் கால்களில் விழுந்து "நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள்' எனக் கூறி கண்ணீர் விட்டார். இது அங்கு கூடியிருந்த மருத்துவர்கள், செவிலியர், பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி சர்வதேச செவிலியர் தினத்தைக் கொண்டாடினர். இதேபோல, கோவை அரசு மருத்துவமனையில் கேக் வெட்டி செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், மருத்துவமனை முதல்வர் அ.நிர்மலா, செவிலியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.