தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினா் 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து, தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ 300 ஊழியா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மே 15-க்குள் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் தலைமையிலான கண்காணிப்பு குழுவினா், ஆலைக்குள் சென்று நேரடியாக பாா்வையிட்டனா்.
ஆய்வின்போது, குழுவில் இடம்பெற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சத்யராஜ், தூத்துக்குடி அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியலாா் ஜோசப் பெல்லாா்மின் அண்டன் சோரிஸ், சுற்றுச்சூழல் நிபுணா்கள் அமா்நாத், பேராசிரியா் கனகவேல் ஆகியோா் உடனிருந்தனா்.
ஏற்கெனவே, கடந்த 5 ஆம் தேதி முதல்கட்டமாக ஸ்டொ்லைட் ஆலைக்குள் நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு செய்த கண்காணிப்பு குழுவினா் தற்போது 2-ஆவது முறையாக நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்துள்ளனா்.