தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய உடல் வெப்ப பரிசோதனை நடந்து வருகிறது.
தற்போது கரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. கெங்கவல்லி ஒன்றியத்தில் மே 1 ந் தேதி முதல் தினமும் 4 முதல் 9 பேர் வரை கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
தற்போது பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி பகுதி முழுவதும் உள்ள, 18 வார்டுகளிலும் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும், நேரிடையாகச் சென்று, பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய பேருராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து மூவர் குழு, தம்மம்பட்டி முழுவதும் வீடு வீடாகச் சென்று , ஒவ்வொருவரது உடல் வெப்பநிலை, உரிய ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்து வருகின்றனர். இதில் , அதிக வெப்பநிலை உள்ளவர்கள், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, பேரூராட்சி நிர்வாகத்தினர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியும் குழுக்களை அதிகப்படுத்தி, மொத்தமுள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை விரைவாக பரிசோதிக்க வேண்டும் , மேலும் பொது முடக்கத்தின் போது வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு தினமும் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர்.