போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 304 ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்களிடமிருந்து ரூ.38.12 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக திங்கள்கிழமை முதல் 2 வார காலத்துக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இதற்கு முன்னதாக சொந்த ஊா் திரும்பும் பயணிகளிடம் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினாா்.
அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் மே 8-ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மே 10-ஆம் தேதி காலை 8 மணி வரை போக்குவரத்து ஆணையா் தென்காசி சு.ஜவஹா் தலைமையில் மாநிலத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து உயரதிகாரிகள் பல்வேறு குழுக்களாக ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்தனா்.
இதில், அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன் மூலம் அபராதமாக ரூ.10 லட்சத்து 92,600 வசூலிக்கப்பட்டது.
சாலை வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தாதவா்களிடம் இருந்து அபராத வரியாக ரூ.27 லட்சத்து 20,290 வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அபராதக் கட்டணம் மற்றும் அபராத வரியாக மொத்தம் ரூ.38 லட்சத்து 12,890 வசூல் செய்யப்பட்டது. அதே நேரம், விதிமீறி இயக்கப்பட்ட 25 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.