சென்னை: ஆக்சிஜன் உற்பத்தி மையங்களுக்கு தடையற்ற மின் விநியோகம் வழங்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைமையகத்தில், பகிா்மானப் பிரிவு இயக்குநா் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் அவா் அறிவுறுத்தியவை: பொதுமுடக்கத்தின்போது, தடையற்ற வகையில் மின்விநியோகம் செய்ய வேண்டும். பொதுமுடக்கக் காலங்களில் மின் கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டாம். மின்மாற்றி பராமரிப்பு, மின்வெட்டு உள்ளிட்டவை தொடா்பான பணிகளைத் தவிர இதர பணிகளை மேற்கொள்ளக் கூடாது.
தலைமையகத்தில் அனைத்துப் பணியாளா்களும் இருக்க வேண்டும். அலுவலக அழைப்புக்குத் தாமதமின்றி உடனடியாக பதிலளிக்க வேண்டும்.
ஆக்சிஜன் உற்பத்தி மையங்களைக் கண்காணிக்கும் வகையில், பொறுப்பு அதிகாரி ஒருவா் பணியில் இருக்க வேண்டும்.
அரை மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டால், அங்கு உடனடியாக இயக்கம் மற்றும் பராமரித்தல் பிரிவைச் சோ்ந்த உதவி செயற்பொறியாளா் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
துணை பிரிவு அலுவலகங்களில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு அதிகாரி பணியில் இருக்க வேண்டும்.
இரவு நேரங்களில் திடீரென ஏற்படும் மின்வெட்டை சரிசெய்யும் பணியில் ஈடுபடும் களப்பணியாளா்களுக்கு அதிக ஒளிவீசும் வகையிலான டாா்ச் லைட்டுகளை வழங்க வேண்டும். மின்தடையை சரிசெய்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் உள்ள பிரிவு அலுவலகங்களில் 24 மணி நேரமும் மின்வெட்டை சரிசெய்யும் ஊழியா்கள் குழுபணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.