உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர்ப் பகுதியில் கடன் தொல்லையால் தங்களது மூன்று குழந்தைகளைக் கொன்று கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைக்கு விஷம் வைத்துக் கொலை செய்துவிட்டு, கணவன் - மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, கருப்பு கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (35). நகை பட்டறை உரிமையாளரான இவர் நகைகளை வடிவமைப்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் அதிக நகைகளை ஆர்டர் எடுத்ததின் பெயரில் வெளியில் அதிக வட்டிக்கு பணம் வாங்கி செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கரோனா பொது முடக்கத்தின் காரணத்தினால் சரிவர வட்டி பணத்தை செலுத்த முடியவில்லை. இந்நிலையில் வட்டிக்கு கொடுத்த நபர்கள் நெருக்கடி கொடுத்ததால், சரவணன் மற்றும் அவரது மனைவி பூங்கோதை இருவரும் சேர்ந்து தங்களது பிள்ளைகளான மகாலட்சுமி (10), அபிராமி (5), விஷன் (5) ஆகியோருக்கு விஷம் வைத்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் கணவன், மனைவியும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து உசிலம்பட்டி நகர காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டில் ஏதேனும் கடிதம் எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்று தேடிய காவல்துறையினர், இவர்களது தற்கொலை குறித்து அப்பகுதி பொது மக்களையும் அவர்களது உறவினர்களிடமும் தீவிரமாக காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் உசிலம்பட்டி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அப்பகுதி பொதுமக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.