தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நேரில் சந்தித்து ஏழுமலையானின் பிரசாதத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிப் பெற்று முதல்வா் பொறுப்பேற்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா். முதல்வா் வீட்டுக்குச் சென்ற அவா்கள், ஏழுமலையானின் சேஷ வஸ்திரத்தை முதல்வருக்கு அணிவித்து லட்டு, வடை, தீா்த்தப் பிரசாதங்கள் அளித்து வேதபண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து வாழ்த்து தெரிவித்தனா். அப்போது முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின் உடன் இருந்தாா். புதிய முதல்வா்கள் பொறுப்பேற்கும்போது தேவஸ்தான அதிகாரிகள் சென்று பிரசாதம் வழங்கி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.