தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ராதாபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ அப்பாவு தேர்வாகவுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் இருந்து 1996, 2001, 2006 தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர் அப்பாவு. 2011. 2016 தேர்தல்களில் தோல்வி அடைந்தார். கடந்த 2016 தேர்தலில் மட்டும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னர் 2021 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிக அனுபவம் கொண்ட மூத்த எம்எல்ஏவாக இருக்கிறார்.
முன்னதாக, பேரவைத் தலைவராக அப்பாவு முன்னிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும் தென்மாவட்டத்தில் இருந்து அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியும் மக்களிடம் இருந்தது. இந்நிலையில் பேரவைத் தலைவராக அப்பாவு தேர்வாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தென் மாவட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர். குறிப்பாக பெப்சி மற்றும் கோலா நிறுவனங்கள் தாமிரவருணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை எதிர்த்தவர்.
இன்று தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்ட கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி, அவையின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1996-2001 காலத்தில் கருணாநிதி அமைச்சரவையில் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தவர் கு.பிச்சாண்டி. நான்காவது முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.