கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிகைகையில், கரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டு குறைந்த அளவு தொற்று உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், வியாசர்பாடியை தொடர்ந்து இதே போல் மேலும் 12 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
முந்தைய அலையில் கரோனா சிகிச்சைக்கு கரோனா நோயாளிகளுக்கு தமிழகத்தில் பாரம்பரிய வைத்திய முறையான சித்த மருத்துவம் மற்றும் கபசுர குடிநீர் நல்ல பலனை தந்துள்ளது. அதுபோல ஹோமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்பம் மருந்தும் உதவியாக அமைந்தது. இதனால் கரோனா பரவல் தமிழகத்தில் கட்டுபடுத்தப்பட்டதுடன் உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டன. ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் சிகிச்சை முறை மூலமும் கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு கரோனா சிகிச்சைக்கு தமிழகத்தில் பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை முறையுடன், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் துறையில் உள்ள வல்லுனர்களுடனும் கலந்தாலோசித்து இந்த சிகிச்சை முறைகளையும் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.