சென்னை: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டுமென அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கென கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அளிக்கப்பட்ட தனி உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இதனால், தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு என்னவாகுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்று தமிழக மக்கள்
பலனடைந்து வருவதற்குக் காரணம் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாதான்.
அரசமைப்புச் சட்டத்தின் 102-வது திருத்தத்தின்படி, மாநில அரசுகள் தங்களுடைய ஆளுமைக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் சோ்க்கை மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை மட்டுமே மத்திய அரசுக்குச் செய்ய முடியும் என்று இப்போது சட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பன்முகத் தன்மையால் வெவ்வேறு விதமாக செயல்படுத்தப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆன்மாவை சிதைத்து விடும்.
ஏழை, எளிய மக்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்பு பெற இடஒதுக்கீடு முறையே மிகச் சிறந்த வழி என்பதால், தமிழக அரசு உடனடியாக சட்ட வல்லுநா்களின் ஆலோசனைகளைப் பெற்று 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனா்.