சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புதன்கிழமை இரவு விருதுநகர், மாவட்டத்தின் பல்வேறு சங்கிலி பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 18 சவரன் நகைகளை கைப்பற்றினர்.
மானாமதுரை போலீஸ் டிஎஸ்பி சுந்தர மாணிக்கம் உத்தரவின்படி, குற்றப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் நாகராஜன், முத்துராஜன் உள்ளிட்ட போலீசார் மானாமதுரை சிப்காட் போலீஸ் சரகம் சிவகங்கை சாலையில் கொன்னக்குளம் விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரு பைக்குககளில் வந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மதுரை சின்னக்கண்மாய் பகுதியைச் சேர்ந்த வீரசின்னு மகன் மாடசாமி(36), ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் பாலமுருகன் (33) என்பது தெரியவந்தது.
இவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால் சந்தேகமடைந்த குற்றப்பிரிவு போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மானாமதுரை பகுதி உள்பட விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 11 இடங்களில் மாடசாமி, பாலமுருகன் இருவரும் பல சங்கிலி பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு 48 பவுன் நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இவர்களை கைது செய்து வழக்கு பதிந்து சிவகங்கை மாவட்டத்தில் இருவரும் பெண்களிடம் வழிப்பறி செய்த 18 பவுன் நகைகளையும் சங்கிலி பறிப்புச் சம்பவங்களுக்கு பயன்டுத்திய இரு பைக்குகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.