உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கரோனா பொது முடக்கம் விதிமுறைகளை மீறி அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட்டன.
கரோனா இரண்டாவது அலை இந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்த அலை எப்போது ஓயும் என்றும் தெரியவில்லை. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் தொற்று வேகமாக பரவும் நிலையில் அதனைதடுக்கும் விதமாக பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது . வியாழக்கிழமை முதல் பால், மருந்துகடைகளை தவிர அனைத்து கடைகளும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டுமென என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கரோனா தொற்று வேகமாக பரவுகிறது. அதனை தடுக்கும் விதமாக கரோனாவிற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்காமல் உசிலம்பட்டியில் வழக்கம் போல் அனைத்து கடைகளும் காலை முதல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது . டீ கடைகள், பேக்கரிகளில் வழக்கம்போல் அமர்ந்து டீ அருந்துதல் , மளிகை கடைகள் , காய்கனி கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்பது மற்றும் பியூட்டி பார்லர், சலூன் கடைகள் உள்ளிட்ட கடைகள் வழக்கம் போல் செயல்பட்டது .
இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.