தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் கரோனா கட்டுபாடுகள் இன்றி அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் முடிவுற்று தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
தேர்தல் பிராசரத்தின்போது அரசியல் கட்சியினர்களால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக 50-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக சென்று பிராசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 50 சதவிகிதத்திற்கு மேல் யாரும் முகக்கவசம் அணிவதில்லை. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகளும் முன் வருவதில்லை.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபாரதம் விதிக்கு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் எந்த பறக்கும்படையும் சோதனை செய்து அபராதம் பிறப்பித்ததாக தெரியவில்லை.
தேர்தல் பறக்கும்படையினர் அப்பாவி வியாபாரிகளிடம்தான் பணத்தை பறிமுதல் செய்து வருகிறது. இதுவரை அரசியல் கட்சியினரிடம் பணம் வசூலித்ததாக வரலாறு இல்லை.
தற்போது கரோனா தொற்று மீண்டும் பரவி வரும் வேளையில் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எந்த பிரசாரக் கூட்டத்திலும் பெரும்பான்மையான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கரோனா தொற்று கடலூர் மாவட்டத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. எனவே, கடலூர் மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.