கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காமல், அதிமுகவிற்கு ஒதுக்கக் கோரி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அம்மன் கே. அர்ச்சுணன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வரும் தேர்தலில் தெற்கு தொகுதியை பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசனுக்கு ஒதுக்குவதாகத் தகவல் வெளியாகியது.
இதைத் தொடர்ந்து அதிமுகவினர் தெற்கு தொகுதியை அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டுமென புதன்கிழமையன்று கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் கோஷமிட்டனர். தொடர்ந்து நுழைவாயிலில் அமர்ந்து தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
அதேபோல இந்த தொகுதியை மீண்டும் அம்மன் கே. அர்ச்சுணனுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஒருவேளை கூட்டணிக் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கினால் கூண்டோடு ராஜிநாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.