புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடக் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதற்காக என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும்,பாஜக அதிமுகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தாகியுள்ளது.
இந்த நிலையில் கூட்டணியில் உள்ள பாமகவுக்கு இடம் ஒதுக்காததால் தனித்துப் போட்டியிடுவோம் என புதன்கிழமை அறிவித்திருந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பாஜக கூட்டணியில் பாமகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பாஜக தரப்பில் கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை எனத் தெரிவித்த பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ், தனித்துப் போட்டியிடுவதாகத் தெரிவித்து 15 வேட்பாளர் கொண்ட உத்தேச பட்டியலை வெளியிட்டு, அதற்கான ஒப்புதல் பெறவும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.